யேர்மன் தமிழ் ஆன்மீகப்பணியகம் தயாரித்து வழங்கும் நாளாந்த நற்சிந்தனை
(ஒலிவடிவம்)





முதலாவது திருவழிபாடு ஆண்டு
பொதுக்காலம் 2வது வாரம் செவ்வாய்க்கிழமை
2017-01-17

0தூய வனத்து அந்தோனியார்




முதல் வாசகம்

நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்
எபிரேயருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 6:10-20

10 ஏனெனில், கடவுள் நீதியற்றவர் அல்ல. இறைமக்களுக்கு நீங்கள் முன்பு தொண்டாற்றி வந்தீர்கள்: இப்போதும் தொண்டு செய்துவருகின்றீர்கள். எனவே கடவுள் பெயரால் நீங்கள் காட்டிய அன்பையும் உழைப்பையும் அவர் மறக்க மாட்டார்.11 நீங்கள் எதிர்நோக்குவது முழு உறுதிபெறும்பொருட்டு, உங்களுள் ஒவ்வொருவரும் முன்பு காட்டிய அதே ஆர்வத்தையே இறுதி வரை காட்ட வேண்டும் என மிகவும் விரும்புகிறோம்.12 இவ்வாறு நீங்கள், தளர்ச்சிக்கு இடம் கொடாமல், நம்பிக்கையாலும் பொறுமையாலும் இறைவாக்குறுதிகளை உரிமைப்பேறாகப் பெற்றவர்களைப் போல் வாழுங்கள்.13 ஆபிரகாமுக்குக் கடவுள் வாக்குறுதி அளித்தபோது, தம்மைவிடப் பெரியவர் எவர் பெயராலும் ஆணையிட்டுக்கூற இயலாததால் தம் மீதே ஆணையிட்டு,14 நான் உன்மீது உண்மையாகவே ஆசிபொழிந்து, உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன் என்றார்.15 இதன்படி அவரும் பொறுமையோடு காத்திருந்து, பின் கடவுள் வாக்களித்ததைப் பெற்றுக்கொண்டார்.16 தங்களைவிடப் பெரியவர் ஒருவர் பெயரால்தான் மக்கள் ஆணையிடுவர். எல்லாச் சச்சரவுகளிலும் ஆணையிட்டே முடிவு கட்டுவர். அம்முடிவை ஆணை உறுதிப்படுத்தும்.17 அவ்வாறே, கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத் தன்மையை மிகவும் தெளிவாகக் காட்ட விரும்பி, ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிபடுத்தினார்.18 மாறாத் தன்மையுடைய இவை இரண்டையும் பொறுத்தவரையில் கடவுள் உரைத்தது பொய்யாயிருக்க முடியாது. அடைக்கலம் தேடும் நாம், நம் கண்முன் எதிர்நோக்கியுள்ளதை விடாமல் பற்றிக்கொள்வதற்குத் தளரா ஊக்கம் கொண்டிருக்கவேண்டும்.19 இந்த எதிர்நோக்கே நம் உள்ளத்திற்குப் பாதுகாப்பான, உறுதியான, நங்கூரம் போன்றுள்ளது. இது கோவிலின் திரைச்சீலைக்கு அப்பால் சென்று சேர்ந்திருக்கிறது.20 நமக்கு முன்னோடியாய் அந்தத் திரைச்சீலையைக் கடந்து இயேசு அங்குச் சென்று சேர்ந்திருக்கிறார். மெல்கிசதேக்கு முறைப்படி என்றென்றும் தலைமைக் குரு என்னும் நிலையில் நம் சார்பாக அவர் அங்குச் சென்றிருக்கிறார்.

- இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

- இறைவா உமக்கு நன்றி



பதிலுரைப் பாடல்

ஆண்டவர் உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்
திருப்பாடல்கள் 111:1-5

1 அல்லேலூயா! நெஞ்சார ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்; நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும் அவருக்கு நன்றி செலுத்துவேன்.

2 ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை; அவற்றில் இன்பம் காண்போர் அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர். 3 அவரது செயல் மேன்மையும் மாண்பும் மிக்கது; அவரது நீதி என்றென்றும் நிலைத்துள்ளது.

4 அவர் தம் வியத்தகு செயல்களை என்றும் நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்; அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர். 5 அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு உணவு அளிக்கின்றார்; தமது உடன்படிக்கையை என்றும் நினைவில் கொள்கின்றார்


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை. அல்லேலூயா

நற்செய்தி வாசகம்

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2:23-28

23 ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர்.24 அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ' பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ' என்று கேட்டனர்.25 அதற்கு அவர் அவர்களிடம், ' தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?26 அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ' என்றார்.27 மேலும் அவர் அவர்களை நோக்கி, ' ஓய்வுநாள் மனிதருக்காக உண்டாக்கப்பட்டது; மனிதர் ஓய்வு நாளுக்காக உண்டாக்கப்படவில்லை.28 ஆதலால் ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே ' என்றார்.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

- கிறிஸ்துவே உமக்கு புகழ்.




இன்றைய சிந்தனை

''இயேசு, 'ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே' என்றார்'' (லூக்கா 6:5)

ஓய்வு நாள் என்பது யூதருடைய சமய வழக்கங்களில் மிக முக்கியமான ஒன்று. வெள்ளிக் கிழமை மாலை பொழுது சாயும் வேளையிலிருந்து தொடங்கி மறுநாள் சனிக்கிழமை பொழுது சாய்வது வரை ஓய்வு நாள் அனுசரிக்கப்பட்டது. ஆறு நாள்களில் உலகைப் படைத்த கடவுள் ஏழாம் நாள் ஓய்வெடுத்தார் என்னும் விவிலியச் செய்தியின் அடிப்படையில் ஓய்வுநாள் சட்டம் விளக்கப்பட்டது. கடவுளின் படைப்பை வியந்து, நன்றியுணர்வோடு கடவுளுக்குப் புகழ்செலுத்தும் நாளாக ஓய்வுநாள் அமைந்தது. அன்றாட வேலையிலிருந்து ஓய்வெடுப்பதற்கும் அந்நாள் பொருத்தமாக இருந்தது. என்றாலும் யூத சமயத் தலைவர்கள் ஓய்வுநாள் கட்டளைக்கு அளித்த விளக்கங்கள் மக்கள்மேல் திணித்த ஒரு பெரிய சுமையாக மாறிவிட்டிருந்தது. சட்டத்தைப் பாதுகாப்பதற்காகப் புதுப்புது விளக்கங்களைத் தந்து இறுதியில் சட்டத்தின் உண்மையான நோக்கத்தை அவர்கள் மறந்துவிட்டிருந்தார்கள். சட்டம் மனிதருக்கா மனிதர் சட்டத்திற்கா என்று கேட்டால் அவர்கள் மனிதர் சட்டத்திற்காகவே என்று பதிலளித்திருப்பர். ஆனால், இயேசுவின் அணுகுமுறை யூத அறிஞரின் அணுகுமுறைக்கு நேர்மாறாக அமைந்தது. மனிதத் தேவைகள் எழும்போது சட்டம் அடிபணிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற சக்தியாக மாறிவிடலாகாது.

ஓய்வு நாளில் இயேசுவின் சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றது சட்டத்திற்கு மாறானதல்ல (காண்க: இச 23:25). ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று அவ்வாறு செய்தது சரியல்ல என இயேசுவின் எதிரிகள் வாதாடினர். இயேசு அவர்களோடு வாதத்தில் ஈடுபட மறுத்துவிட்டார். மாறாக, பசியாய் இருந்தபோது தாவீதும் அவரோடு இருந்தவர்களும் ''அர்ப்பண அப்பங்களை'' எடுத்து உண்டது எப்படி சட்டத்திற்கு எதிராக அமையவில்லையோ அதுபோலவே, பசியாயிருந்த சீடர் ஓய்வுநாளில் கதிர்களைக் கொய்து தானியத்தை உண்டது சட்டத்தை மீறியதாகாது என இயேசு போதித்தார். மக்களின் வாழ்வுக்காக இயேசுவே ''அர்ப்பண அப்பமாக'', நற்கருணையாக மாறினார்; தம்மையே நமக்கு உணவாக அளித்தார் என்பதையும் நாம் இவண் நினைவுகூரலாம். ஓய்வுநாள் என்றால் என்னவென்று விளக்குவதற்கு இயேசு அதிகாரம் கொண்டிருந்தார் என்னும் செய்தி அவருடைய எதிரிகளுக்குப் பெரும் வியப்பைத் தந்திருக்க வேண்டும். ஆனால், இயேசுவின் போதனைப்படி, சட்டம் மனிதருக்குப் பணிபுரிய வேண்டுமே ஒழிய மனிதரை அடிமைப்படுத்துகின்ற எசமானனாக மாறிவிடலாகாது. சிலர் சட்டத்தின் பெயரால் அநீதி இழைக்கத் தயங்கமாட்டார்கள். பிறருக்கு என்ன நிகழ்ந்தாலும் சரி, சட்டம் மட்டும் மீறப்படலாகாது என்பது அவர்களுடைய பார்வை. ஆனால் இயேசுவின் பார்வை அதுவல்ல. அவர் மனிதருக்கே முதன்மை அளித்தார். எதுவெல்லாம் மனித நலனுக்குத் தடையாக அமைகிறதோ அதைத் தகர்த்து எறிய வேண்டும் என்பதே இயேசுவின் அணுகுமுறை.

மன்றாட்டு:

இறைவா, மனித நலனை எப்போதும் முன்னிலைப்படுத்தி உமது புகழைப் பாடிட எங்களுக்கு அருள்தாரும்.